பாரதியார் பாடல்கள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, January 24, 2023

பாரதியார் பாடல்கள்

 காணி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மிளநீரும்.


பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்

காவலுற வேணும், - என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.




நல்லதோர் வீணை


நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?




சுட்டும் விழிச் சுடர் தான்


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ



சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்



சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று




காக்கை சிறகினிலே


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




சின்னஞ் சிறு கிளியே


சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !

செல்வ களஞ்சியமே !

என்னைக் கலி தீர்த்தே - உலகில்

ஏற்றம் புரிய வந்தாய் !


பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !

பேசும்பொற் சித்திரமே !

அள்ளி யணைத்திடவே - என் முன்னே

ஆடி வருந் தேனே !


ஓடி வருகையிலே - கண்ணம்மா !

உள்ளங் குளிரு தடீ !

அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ !


உச்சி தனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளரு தடீ !

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்

மேனி சிலர்க்குதடீ !


கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ !

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !

உன்மத்த மகுதடீ !


சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது

சஞ்சல மாகு தடீ !

நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ !


உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ !

எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !

என்னுயிர் நின்ன தன்றோ ?


சொல்லும் மழலையிலே - கண்ணம்மா

துன்பங்கள் திர்த்திடு வாய்

முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,


இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ?


மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ?




நின்னயே ரதி என்று 


நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!

தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)


பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..

பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)


மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!

கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)


யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!

மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)




ஆசை முகம் மறந்து போச்சே


ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்

நினைவு முகம் மறக்கலாமோ

(ஆசை)


கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்

கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் - அந்த

நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

(ஆசை)


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த

வையம் முழுதுமில்லை தோழி

(ஆசை)


கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த

கண்களிருந்து பயனுண்டோ

வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி

வாழும் வழியென்னடி தோழி

(ஆசை)




தீராத விளையாட்டுப் பிள்ளை


தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால்-அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

மானொத்த பெண்ணடி என்பான்-சற்று

மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)


அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை

அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)


பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)


புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது

பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,

கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)


அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்

ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;

எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்

எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)


விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்

வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;

இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை

இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)


அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி

அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,

எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்

யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)


கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை

சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;

ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்

அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)




போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!



போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்

பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்

சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்

செய்ய தாமரைத் தேமலர் போலோளி

தோற்றி நின்றனை பாரத நாடைலே;

துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை

சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள் 

சாதி செய்த தவப்பயன் வாழி நீ!



மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்

நாதந் தானது நாரதர் வீணையோ?

நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?

வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே

மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?

சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?

தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!

-----------------------------------------------------------------------------------------------


அறிவு கொண்ட மனித வுயிர்களை

அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;

நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்

நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,

சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்

தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;

நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்

நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

-------------------------------------------------------------------------------------------------------


ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

---------------------------------------------------------------------------------------------------


நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;

நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்

தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்

சாலவே யரி தாவதொர் செய்தியாம்;

குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;

கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்

நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;

நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!

----------------------------------------------------------------------------------------------------------------------------


புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்

மாத வப்பெரி யோருட னொப்புற்றே

முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய

முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

-----------------------------------------------------------------------------------------


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

----------------------------------------------------------------------------------------------------------------


உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,

ஓது பற்பல நூல்வகை கற்கவும்,

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே

திலக வாணுத லார்நங்கள் பாரத

தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

---------------------------------------------------------------------------------------------


சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்;

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;

காத்து மானிடர் செய்கை யனைத்தையும்

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

---------------------------------------------------------------------------------------



போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்

புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!

மாற்றி வையம் புதுமை யுறச்செய்து

மனிதர் தம்மை அமர்க ளாக்கவே

ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்

அருளி நாலொரு கன்னிகை யாகியே

தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்

செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்




அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே



எட்டுத் திசையும் பறந்து


பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே


சரணங்கள்


1

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)


2

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்

பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு

முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)


3

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்

வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)